Tuesday 14 October 2014

குறும்பட விருது விழா - 2014: வென்றது 'சுட்டவடு'


லொயோலா கல்லூரி ஊடகக் கலைகள் துறை பரிவு மாத இதழுடன் இணைந்து மூன்றாவது ஆண்டாக நடத்திய குறும்படப் போட்டி முடிவுகள் அக்டோபர் 10, 2014 அன்று நடைபெற்ற விருது விழாவில் அறிவிக்கப்பட்டது. தமிழ்த் திரையுலக பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். 


இடமிருந்து வலம்: திரைக்கதை ஆசிரியர் முருகேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் ராமநாத் ஷெட்டி, நடிகர் வித்தார்த், ‘அட்டக்கத்தி’ இயக்குநர் பா.ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் நண்பராக நடித்திருக்கும் நடிகர் அன்பு, ‘ஆள்’ இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணா, ‘பரிவு’ மாத இதழ் ஆசிரியர் ச.சக்திவேல்.

தமிழகம் முழுவதிலிருந்தும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்துவரும் கல்லூரி மாணவர்கள் தங்கள் குறும்படப் படைப்புகளை அனுப்பி வைத்திருந்தனர்.

புகைப் பழக்கத்தினால் நாவின் சுவை அற்றுப்போதலை படமாக்கியிருந்த ‘சுட்டவடு’ சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  நடுவர்கள் முருகேஷ் பாபு மற்றும் ராமநாத் ஷெட்டி பேசுகையில், மாணவர்களின் படைப்புகள் எங்களுக்கும் கற்றுத் தருபவையாக இருந்தன என்று பாராட்டினர்.

நடிகர் வித்தார்த் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், நீங்கள் செய்வதை முழு மனதோடு செய்யுங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும் என்று பேசினார்.

அட்டக்கத்தி, மெட்ராஸ் திரைப்படங்களின் மூலம் மாணவர்களைத் தன் பக்கம் இழுத்திருக்கும் இயக்குநர் ரஞ்சித், சாதிய கட்டிலிருந்தும் மதவாத கட்டிலிருந்தும் வெளியே வாருங்கள் என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

‘ஆள்’ இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணா லொயோலா கல்லூரியில் படிக்க விரும்பியதாகவும் ஆனால் இங்கு அனுமதி மறுக்கப்பட்டவர் அதே இடத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பது தனக்கு பெருமையளிப்பதாகவும் கூறினார்.

பரிவு மாத இதழ் ஆசிரியர் சக்திவேல் ஊடகக் கலைகள் துறையுடன் சேர்ந்து இப்போட்டியை நடத்தி வருங்கால திரையுலகப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் தன் பங்கு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

ஊடகக் கலைகள் துறைத் தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார் இந்நிகழ்ச்சியை சிறப்புர திட்டமிட்டு நடத்தியதற்காக பேராசிரியை முனைவர் ஞானபாரதி மற்றும் சகப் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துக்களைப் பதிவு செய்தார்.

No comments:

Post a Comment